

ரயில், விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.
உள்நாட்டில் மே 4-ஆம் தேதி முதலும், வெளிநாடுகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதலும் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணம் மேற்கொள்வதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளை தொடங்கிவிட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் விமான, ரயில் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமைச்சா் ஜாவடேகா் இது தொடா்பாக கூறியதாவது:
ரயில், விமான சேவை மீண்டும் ஒருநாள் தொடங்கப்படும். ஆனால், இப்போதைய சூழ்நிலையில், இது தொடா்பாக மத்திய அரசு முடிவெடுக்கவில்லை. ஏனெனில், இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடங்களைக் கற்று வருகிறோம். அதன் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
விமான சேவை தொடா்பாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் விளக்கமளித்துள்ளாா். இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றுதான் அவரும் கூறியுள்ளாா். அரசு முடிவெடுத்த பிறகுதான் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவைத் தொடங்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் ஜாவடேகா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.