

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பல்காரில் சிறுநீரகத்தைத் திருடி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி மூன்று பேரை அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 110 கிராமத்தினர் மீது வழக்குப் பதவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் 101 பேர் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 9 பேர் சிறுவர்கள் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளனர்.
கட்சின்சலே கிராமத்தில் வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் காவல்துறையினரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக அந்த கிராமத்தில், சிறுநீரகத்தைத் திருடி விற்கும் கும்பல் ஒன்று நடமாடுவதாக புரளி கிளம்பியது. இந்த நிலையில், கிராமத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை கிராமத்தினர் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, பல்காரில் இருந்து நாஸிக் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் இருந்த மூன்று பேரை கிராமத்தினர் சிறுநீரகத்தை திருடி விற்பவர்கள் என்று கருதி அடித்துக் கொன்றுள்ளனர். கிராமத்தினர் தங்களை தாக்குவதாக காவல்துறைக்கு அவர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து, தடுக்க வந்த காவலர்களையும் கிராமத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு முன்பு, கிராமத்தினரின் சமூக வலைத்தளப் பக்கங்களில் எந்த விதமான செய்திகள் பரவின என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் இவ்வவாறு நடப்பது இது முதல் சம்பவம் அல்ல என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துலே என்ற பகுதியில் இதே போல சிறுநீரகத் திருடர்கள் என்று கருதி சிலரை இந்த கிராமத்தினர் அடித்துக் கொன்றச் சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.