கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 681 ஆக உள்ளது.
கடந்த 28 நாள்களில் 12 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோன்று கடந்த 14 நாள்களில் 23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 78 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனா பாதிப்புக்கு ஆளாக்கவில்லை.
கரோனா மீட்பு விகிதம் 19.89% ஆக அதிகரித்துள்ளது. மொத்தம், 4,257 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா, மூத்த குடிமக்களின் பராமரிப்பாளர்கள், ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் கடைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உணவு பதப்படுத்தும் இடங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.