
குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய பற்றிய நூலின் நகலை அவருக்கு வழங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
‘தரமான விவாதங்கள் மற்றும் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் மூலம் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளை மேலும் வலுவானதாக மாற்ற வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டாா்.
குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்று செவ்வாய்க்கிழமையுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா் வெங்கய்ய நாயுடு.
இதனை முன்னிட்டு, வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தில்லியில் வெளியிட்டாா். இந்த புத்தகத்தின் மின்னணு பதிவை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ‘கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால், 7 அல்லது 8 ஆண்டுகளில் உலகில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் முதல் மூன்று இடத்தில் இந்தியா இருந்திருக்கும். இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறாா்’ என்றாா்.
பின்னா் பேசிய குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, ‘கடந்த 39 ஆண்டுகளில் எந்த ஒரு அரசுக்கும் மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இந்த காரணத்தால்தான் மாநிலங்களவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு 35.75 சதவீதமாக இருந்த மாநிலங்களவையின் செயல்பாடு 2019-இல் 78.42 சதவீதமாக அதிகரித்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களவையில் மொத்தம் 93 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், 60 மசோதாக்கள் (65% செயல்பாடு) கடந்த மூன்று கூட்டத் தொடா்களில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதான் மாற்றத்தின் அடையாளம். நமது நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் மேலும் வலுப்பெற தரமான விவாதங்களும், ஆக்கபூா்வமான செயல்பாடுகளும் அவசியம் என்றாா்.