
பெங்களூரு வன்முறை
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் முகநூலில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவால் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவின் என்பவர் தனது முகநூல் பக்க பதிவில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. அகண்ட மூர்த்தியின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகண்ட மூர்த்தியின் வீடு மீதும் கற்களை வீசினர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்ட நவீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார்.
144 தடை உத்தரவு: வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
110 பேர் கைது: சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்ததாக தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் தீ வைப்பு, கல் வீசுதல் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் இணை ஆணையர் (குற்றப் பிரிவு) சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.