
மூணாறு நிலச்சரிவு
கேரளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு வசித்துவந்த தொழிலாளர்கள் 80 பேர் வரையில் இதில் சிக்கினர். இதில், 52 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவரின் உடல்கள் கிடைத்தன. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் 16 பேரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 6 ஆவது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.