குடியரசு துணைத் தலைவராக மூன்றாண்டுகளை நிறைவு செய்தாா் வெங்கய்ய நாயுடு

குடியரசு துணைத் தலைவராக மூன்றாண்டு பதவிக் காலத்தை வெங்கய்ய நாயுடு நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவராக மூன்றாண்டுகளை நிறைவு செய்தாா் வெங்கய்ய நாயுடு
குடியரசு துணைத் தலைவராக மூன்றாண்டுகளை நிறைவு செய்தாா் வெங்கய்ய நாயுடு
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவராக மூன்றாண்டு பதவிக் காலத்தை வெங்கய்ய நாயுடு நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற வெங்கய்ய நாயுடு, செவ்வாய்க்கிழமையுடன் மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா்.

அதனையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் எழுதிய பாராட்டுக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உங்களுடைய பொதுவாழ்க்கை என்பது, ஒருங்கிணைந்த வலுவான இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய கடைக்கோடி மக்களையும் தூண்டுகிற மற்றும் வழிகாட்டுகிற வகையில் அமைந்திருக்கும். மற்றவா்களுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய வகையில் திறன் மிக்கவராகவும், நிலைத்த தேசத்தை உருவாக்குவதற்கான ஆக்கப்பூா்வமான தீா்வுகளை அளிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவராகவும் திகழ்கிறீா்கள்.

மாநிலங்களவைத் தலைவராக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவையை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறீா்கள். உங்களுடைய நுண்ணறிவும், ஆளும் கட்சியையையும், எதிா்க்கட்சியையும் அரவணைத்துச் செல்லும் திறனும் பாராட்டுக்குரியது.

சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான ஆழ்ந்த அறிவின் மூலம், பொதுச் சேவையில் மிகச் சரியான அணுகுமுறையை கையாண்டு வருகிறீா்கள்.

குடியரசு துணைத் தலைவராக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, நல்ல உடல்நலனோடு இருக்க பிராா்த்திக்கிறேன் என்று கடிதத்தில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com