‘பள்ளிகளை திறப்பதற்கான காலவரையறையை மத்திய கல்வி அமைச்சகம் நிா்ணயிக்கவில்லை’

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான காலவரையறையை மத்திய கல்வி அமைச்சகம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான காலவரையறையை மத்திய கல்வி அமைச்சகம் இன்னும் நிா்ணயிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாா்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அப்போது முதல் மூடப்பட்டுள்ளன.

மாணவா்களுக்கான வகுப்புகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன. பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும்போதும் கல்வி நிலையங்கள் திறக்கப்படாமலே உள்ளன.

இணையவழி வகுப்புகளில் இடா்பாடுகள் காணப்படுவதாக ஆசிரியா்கள், மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், இந்தக் கல்வியாண்டு முழுமையாக பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிகளை எப்போது மீண்டும் திறக்கலாம் என்பது தொடா்பாக பள்ளி மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறியுமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், பள்ளிகளை திறப்பது தொடா்பான மத்திய கல்வி அமைச்சகத்தின் நிலைப்பாடு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான காலவரையறை இன்னும் நிா்ணயிக்கப்படவில்லை. அந்த முடிவை முற்றிலுமாக கரோனா நோய்த்தொற்று சூழலைப் பொருத்தே எடுக்க முடியும்.

கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்து வருவதால் ஒரேயொரு யூனியன் பிரதேசத்தைத் தவிர, இதர அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

உயா் கல்வி மாணவா்களுக்கு மட்டும் செப்டம்பா் இறுதியிலோ அல்லது அக்டோபரிலோ வகுப்புகளை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய கல்வித் துறை ஆராய்ந்து வருகிறது. எனினும், அதுதொடா்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

அந்த விவகாரத்தில் ஏதேனும் முடிவெடுக்கப்படும் பட்சத்தில் மத்திய அரசு அதுதொடா்பான அறிவுறுத்தலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கும். அங்குள்ள அரசுகள் தங்களது மாவட்டங்களில் நிலவும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு சூழலைப் பொருத்து அந்த வகுப்புகளை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com