கைலாசத்தினுடைய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தியன்று, கைலாசத்தினுடைய நாணயங்கள் - காசு வெளியிடப்படும் என்று நித்யானந்தா அறிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், 300 பக்கங்கள் கொண்ட கைலாசத்தினுடைய பொருளாதாரக் கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து காணொலி வாயிலாக நித்யானந்தா வெளியிட்ட அறிவிப்பில், இந்த விநாயகர் சதுர்த்தி நாளில், கைலாசத்துடைய நாணயங்கள் - காசு முறைப்படியாக வெளியிடப்படும். விநாயகப் பெருமானின் பேரருளால் பரம்பொருள் பரமசிவனின் பேரருளால் விநாயகர் சதுர்த்தி மிக நல்ல நாள் என்பதால் அன்று அவை வெளியிடப்படும். விநாயகப் பெருமான் பேரருளால் ஏற்கனவே அதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் நல்லபடியாக நிகழ்ந்துவிட்டன.
எந்த நாடு கைலாசத்தினுடைய ரிசர்வ் வங்கியை கையாள்கிறதோ அந்த நாட்டுக்கும் கைலாசத்துக்கு அதாவது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் மற்றும் தூதரக ரீதியிலான புரிந்துணர்வும், சட்ட உடன்படிக்கையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
இரண்டரை மணி நேர விடியோவின் 1.15-வது நிமிடத்தில் இந்த தகவலை நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ 100 புத்தகங்கள் இந்து மதத்திலே பொருளதாரதத்தை எப்படி நமது சாஸ்திரங்கள் அணுகுகின்றன, பொருளாதாரம் என்ற கருத்தை இந்து சாஸ்திரங்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றன என்பதை ஆராய்ந்து 300 பக்க அளவில் கைலாயத்தின் பொருளாதாரக் கொள்கையை தயாரித்திருக்கிறோம் என்றும் நித்யானந்தா அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் பிடரி ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்தல், பாலியல் புகார், கொலை வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவானார்.
ஒரு தீவை விலைக்கு வாங்கி, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதற்கு பிரதமராக தன்னையே பிரகடனமும் செய்து கொண்டார். தினந்தோறும் காணொலியில் வந்து அவரது பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வருகிறார்.
தற்போது, கைலாசா நாட்டின் ரிசர்வ் வங்கி தயார் என்றும், நாணயங்கள் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.