ராஜஸ்தான் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் அசோக் கெலாட். நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
ராஜஸ்தான் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி


ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் அசோக் கெலாட். நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று மீண்டும் இணைந்தனர். இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களும் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ராஜஸ்தானில் இரு துருவங்களாக இருந்த முதல்வா் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததால், அந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. 

முன்னதாக, ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட் அரசின் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகக் கூறி, காவல் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பியதால் சச்சின் பைலட் அதிருப்தியடைந்தாா். இதையடுத்து, அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். அதைத் தொடா்ந்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வா் பதவி, மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டது.

இதற்கிடையே, மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்துவதாகப் புகாா்கள் எழுந்ததால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள், ஜெய்ப்பூரிலும் பின்னா் ஜெய்சால்மரில் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனா். சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் குருகிராமில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனா்.

ராஜஸ்தான் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பதற்காக, பேரவையைக் கூட்ட அழைப்பு விடுக்குமாறு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தாா். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவா் பிரியங்கா காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோா் தலையிட்டு சச்சின் பைலட் தரப்பை கடந்த வாரம் சமாதானப்படுத்தினா்.

கைகுலுக்கி வரவேற்பு: இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் முதல்வா் அசோக் கெலாட் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா். கூட்டத்துக்கு வந்த சச்சின் பைலட்டும் அசோக் கெலாட்டும் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டனா். இக்கூட்டத்தில், ராஜஸ்தான் சட்டப் பேரவையில் நம்பிக்கை தீா்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து: ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களான பன்வா்லால் சா்மா, விஷ்வேந்திர சிங் ஆகியோா் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை ரத்து செய்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com