புது தில்லி: ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதற்கான கடைசி நாளாக இம்மாதம் 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு முன்பே அறிவித்து விட்டது.
அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படும் தகவல்களின்படி நாட்டின் மிகப்பெரிய தனியார் குழுமமான டாட்டா, ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஏர் ஏசியா நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கு, துபாயில் தீவிரவாதி ஒருவருக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு, விஸ்தாரா விமான நிறுவனத்தை ஏர் ஏசியா நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்குவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் மோசடி மற்றும் நீரா ராடியா டேப்புகள் விவகாரம் என அனைத்தையும் தாண்டி, ஏர் இந்தியா நிறுவனம் ‘அழுகிய டி- (Rotten T)-க்கு விற்கப்பட்டால் அரசின் முக்கியப் புள்ளிகள் மீது நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.