மணிப்பூரில் காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ-க்கள் 5 பேர் இன்று (புதன்கிழமை) பாஜகவில் இணைந்தனர். இதில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஒக்ராம் இபோபி சிங் உறவினர் ஒக்ராம் ஹென்ரி சிங்கும் அடக்கம்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் தில்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், தேசியத் துணைத் தலைவர் வைஜயந்த் பாண்டா மற்றும் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபற்றி ராம் மாதவ் தெரிவித்ததாவது:
"பேரவையில் காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவுடன், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களே எங்களது அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜனநாயகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே, எங்களது கோரிக்கைகளை ஏற்று அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்கள் அவர்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர்." என்றார்.
முன்னதாக, முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 6 பேர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்.