மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதன்கிழமை அன்று கர்நாடக மாநிலத்தின் மங்களூரு விமான நிலையத்தின் முன்னாள் இயக்குநரை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தொலைபேசியில் பேசிய நபர் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் இயக்குநர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை அதிகாரிகள் சோதனையிட்டதில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததைத் தொடர்ந்து பொய்யான தகவல் என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தொலைபேசியில் அழைப்பு விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் என்பவரைக் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் மங்களூரு விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.