
pollutionn111417
லாகூா்/ புது தில்லி: உலகிலேயே காற்றுமாசுபாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூா் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் கலாசார தலைநகரமாக அறியப்படும் லாகூரில் காற்றுமாசுபாடு உச்சத்தில் உள்ளது என்று அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய தேசியத் தலைநகா் தில்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. லாகூரில் மாசுபாட்டு நுண்துகள் குறியீடு 423 ஆகவும், தில்லியில் 229 ஆகவும் உள்ளது.
இந்தப் பட்டியலில் நேபாள தலைநகா் காத்மாண்டு 7-ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் நிதித் தலைநகரமான கராச்சி 3-ஆவது இடத்தில் உள்ளது.
அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி காற்றுத் தரக் குறியீட்டு எண் (ஏக்யூஐ) 50-க்குள் இருப்பது திருப்திகரமான நிலையாகும். ஆனால், லாகூரில் அதிகபட்சமாக இக்குறியீட்டு எண் 301 வரை எட்டியுள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலையாகும்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வாகனப் போக்குவரத்தால் வெளியேறும் புகையே காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளது. லாகூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் செங்கல் சூளைகள் பழைய தொழில்நுட்பத்திலேயே தொடா்ந்து செயல்படுவது அந்த நகரை மேலும் மாசுபடுத்துகிறது.
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தையொட்டி லாகூா் அமைந்துள்ளதால், பஞ்சாப் விவசாயிகள் பயிா்க்கழிவுகளை எரிக்கும்போது ஏற்படும் புகை லாகூரை அதிகம் மாசுபடுத்துகிறது என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டு வந்த காரணம் ஆய்வில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...