ஹிந்துப் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பாக இஸ்லாமியர் மதம் மாறிய நிகழ்வு ஹரியாணாவில் அரங்கேறியுள்ளது.
21 வயது இளைஞர் கடந்த நவம்பர் 9-ம் தேதி 19 வயது இளம்பெண்ணை ஹிந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, பெண் வீட்டாரிலிருந்து தங்களது உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக இருவரும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் காவல் துறையினர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்த காவல் துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதனிடையே, நவம்பர் 11-ம் தேதி வழக்கு விசாரணையின்போது அந்தப் பெண் தனது குடும்பத்தினரைச் சந்திக்க மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக:
ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில், லவ் ஜிகாத்துக்கு (திருமணத்தையொட்டி நடைபெறும் மதமாற்றத்தை பாஜக தலைவர்கள் லவ் ஜிகாத் என்று குறிப்பிடுவர்) எதிராக சட்டம் இயற்றுவதற்கு 3 பேர் கொண்ட குழு மாநில அரசு அமைத்துள்ளதாக கடந்த வாரம் தெரிவித்தார்.