
பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புகிறோம்: விவசாய சங்கம்
தில்லியில் மத்திய அரசுடன் இரண்டாவது கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புகிறோம் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனிடையே 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தில்லி விஞ்ஞான்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகத், 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்புவதாகக் கூறினார். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால், குடியரசு நாளில் தில்லியில் நடைபெறும் பேரணியில் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எச்சரித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...