வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி செவ்வாய்க்கிழமை பலியானார்.
ஹரியாணா மாநில சோனிபத்தின் கோஹானா பகுதியில் வசித்து வந்தவர் அஜய் மூர்(வயது 32). இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையான திக்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று காலை திறந்தவெளி பூங்காவில் மூர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் நாளை 5ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.