ஹைதராபாத்: நிகழ்ச்சி மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து, உணவில்லாத ஏழைகளுக்கு வழங்குவதை சமூக சேவையாக செய்து வருகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்.
இவ்வாறு ஒருவர், இருவரல்ல, ஒவ்வொரு நாளும் சுமார் 2,000 பேருக்கு உணவளித்து வருகிறார் இவர்.
மல்லேஷ்வர் ராவ், உணவை வீணாக்கக் கூடாது என்ற ஒற்றை வாக்கியத்துடன் இந்த சமூக சேவையை சுமார் 9 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
பி.டெக். படித்துக் கொண்டிருந்த போது, ஒரு உணவக நிறுவனத்தில் பகுதிநேரமாக பணியாற்றினேன். அப்போது நிகழ்ச்சிகளுக்கு உணவை எடுத்துச் செல்லும் போது, இறுதியில் ஏராளமான உணவு மீந்துவிடுவதை அறிந்து கவலையுற்றேன். அது உணவில்லாத பலருக்கும் சென்று சேர வேண்டும் என்று விரும்பினேன். அப்படித் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.
நான் உணவு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை பொட்டலங்களாகக் கட்டி அதனை சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்குக் கொடுத்தேன். அப்படியே மெல்ல நண்பர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்து இது ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது.
எல்லா நாள்களுமே நிகழ்ச்சிகள் நடைபெறாது என்பதால், உணவகங்களுடன் பேசி, அங்கு வீணாகும் உணவை கொடுக்க ஏற்பாடு செய்தேன். இவ்வாறாக நாள்தோறும் சுமார் 2000 பேருக்கு உணவளிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான உணவு வீணாக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஏழைகளுக்குக் கிடைக்க வழி ஏற்பட்டால், அது அவர்களது வயிறை நிரப்பும். அந்த எண்ணமே இந்த அமைப்புக்குக் காரணம் என்கிறார் உற்சாகத்தோடு.