
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் பர்வேஸ் பட்டின் தனி பாதுகாவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஒரு காலத்தில் ஹிஸ்புல் முஹாஜிதீன் பயங்கரவாதியாக இருந்த பர்வேஸ் பட், பின்னர் பயங்கரவாதத்தைக் கைவிட்டு நல்வழிப்பாதைக்குத் திரும்பி, அரசியலில் களமிறங்கினார். தற்போது மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பர்வேஸ் பட், ஸ்ரீநகரில் உள்ள நாதிபோரா பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை காலை, அவரது வீட்டின் அருகே வந்த சில பயங்கரவாதிகள், பர்வேஸ் பட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது உடனிருந்த பர்வேஸின் தனி பாதுகாவலர் மன்சூர் அகமது பயங்கரவாதிகளை நோக்கி திருப்பிச் சுட்டார். இருப்பினும் அவர்கள் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த மன்சூர் அகமது, மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பர்வேஸ் பட் கூறுகையில், "பயங்கரவாதத்தைக் கைவிட்டு அரசியலுக்கு வந்த பிறகு என் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது. எனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு குறைத்துள்ளது. இதற்கு முன்பு எனக்கு 5 காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். தற்போது 2 காவலர்கள் மட்டுமே உள்ளனர் என்றார் அவர்.