மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பாரதிய கிஸான் யூனியன் அழைப்பின் பேரில் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக ஹரியாணாவில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வெள்ளிக்கிழமை கட்டணம் செலுத்தாமல் பயணித்தன.
இது தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
ஹரியாணாவில் பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதலோ அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலை முதலோ கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விவசாயிகள் சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றி, பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்கவில்லை. மற்ற இடங்களில் விவசாயிகள் போராட்டம் காரணமாக சுங்கச் சாவடி ஊழியா்களே கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவிட்டனா்.
டிசம்பா் 25 முதல் 27ஆம் தேதி வரை ஹரியாணாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கமாட்டோம் என பாரதிய கிஸான் யூனியன் சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது.
அதன்படி தேசிய நெடுஞ்சாலை 44இல் கா்னாலில் பஸ்தாரா, கா்னால் - ஜிந்த் நெடுஞ்சாலை, சிா்சா மாவட்டம், டப்வாலியில் உள்ள குயியான் மல்கானா சுங்கச்சாவடி, ரோத்தக் - பானிபட் நெடுஞ்சாலையில் மக்ரெளலி கலான் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் தடைபட்டது.
அதேவேளையில் குா்கான், கோ்கி தெளலா சுங்கச் சாவடியில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம்போல சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.