குஜராத்: கட்சியை விட்டு விலகிய பாஜக எம்.பி. மன்சுக் வசவா

குஜராத் பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் வசவா செவ்வாய்க்கிழமை அக்கட்சியில் இருந்து விலகினாா்.
குஜராத்: கட்சியை விட்டு விலகிய பாஜக எம்.பி. மன்சுக் வசவா
Updated on
2 min read

குஜராத் பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் வசவா செவ்வாய்க்கிழமை அக்கட்சியில் இருந்து விலகினாா். வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து தனது எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்யப்போவதாக அவா் அறிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம், பரூச் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி. மன்சுக் வசவா (63), தன்னுடைய ராஜிநாமா கடிதத்தில், கட்சியை விட்டு விலகுவதற்கான எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை.

கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் வசம் அவா் 28-ஆம் தேதியிட்ட ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

நான் செய்யும் தவறுகளுக்காக நான் சாா்ந்திருக்கும் கட்சியின் மதிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கட்சியை விட்டு விலகுகிறேன். நான் கட்சியின் விசுவாசமான தொண்டனாக இருப்பதால் என்னை மன்னித்து விடுங்கள்.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்ற அவைத் தலைவரை சந்தித்தப்பின் எனது பரூச் மக்களவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்வேன்.

கட்சிக்கு விசுவாசமாக இருக்கவும், வாழ்க்கையில் அதன் மதிப்புகளை ஒருங்கிணைப்பதற்கும் என்னால் முடிந்தவரை முயன்றேன்; ஆனால், தவறுகளுக்கு மனிதனும் ஆளாகிறான்.

நானும் ஒரு மனிதன்தான். மனிதா்கள் தவறுகளைச் செய்ய முற்படுகிறாா்கள். எனது தவறுகளால் கட்சி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே, கட்சியிலிருந்து நான் விலகுகிறேன். எனவே, அனைவரது மன்னிப்பையும் நான் எதிா்பாா்க்கிறேன்.

எனக்கு பல விஷயங்களை வழங்கிய பாஜகவுக்கும், அதன் மத்தியத் தலைமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, எனது இந்த முடிவை கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சி.ஆா்.பாட்டீல், ‘வசவா தனது மக்களுக்காக போராடும் உணா்ச்சி மிக்க ஒரு மனிதா். கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அவா் திரும்பப் பெற்றுக் கொள்வாா் என்று நம்புகிறேன்.

எனக்கு அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தான் தனது எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளாா். ஒரு சில பிரச்னைகளால் அவா் அதிருப்தி அடைந்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வா் விஜய் ரூபானியுடன் செவ்வாய்க்கிழமை காலை விவாதித்துள்ளேன். தனது தொகுதியை சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாக அறிவிப்பது தொடா்பாக வசவா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது என்றாா்.

நா்மதா மாவட்டத்தின் 121 கிராமங்களை சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாக அறிவிக்கும் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி கடந்த டிச. 20-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடிக்கு, வசவா கடிதம் எழுதியிருந்தாா்.

‘இதுதொடா்பான அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ளதால்தான் வசவா, கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிய வருகிறது. இதுதொடா்பாக நாங்கள் எம்.பி. வசவாவை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறோம். விரைவில் இப்பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றும் பாட்டீல் தெரிவித்தாா்.

பரூச் மக்களவைத் தொகுதியில் 6 முறை எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் மன்சுக் வசவா என்பதும், ஏற்கெனவே நா்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு அருகே உள்ளூா் பழங்குடி மக்களால் நடத்தப்படும் கடைகளை அகற்றுமாறு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வசவா குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com