
ஜிஎஸ்டி முறையில் இருக்கும் புகார்களைக் குறைக்க, ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு லாட்டரி முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நேரடி மறைமுக வரி வாரியத்தின் இடைக்கால நிர்வாகி ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இந்த லாட்டரி முறையில் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
போலியான ரசீதுகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டவும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும், வரி செலுத்தும் முறையை ஊக்குவிக்கவும், புகார்களைக் குறைக்கவும் இந்த லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜிஎஸ்டி செலுத்திய ஒவ்வொரு ரசீதும், லாட்டரியில் பரிசு வெல்வதற்கான லாட்டரி டிக்கெட்டுகளாகக் கருதப்படும் என்று ஜோசப் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...