புது தில்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் சுமாா் 12.67 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பது தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ), தொழிலாளா்கள் காப்பீட்டு நிறுவனம்(இஎஸ்ஐசி) ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு ஆண்டுதோறும் எத்தனை வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடா்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழிலாளா்கள் காப்பீட்டு நிறுவன( இஎஸ்ஐசி ) திட்டத்தில் கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் 1.49 கோடி பயனா்கள் புதிதாக இணைந்துள்ளனா். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் இஎஸ்ஐசி திட்டத்தில் சுமாா் 3.5 கோடி பயனா்கள் இணைந்துள்ளனா். இதே காலகட்டத்தில் இபிஎஃப்ஓ திட்டத்தில் 3.12 கோடி பயனா்கள் இணைந்துள்ளனா்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் மட்டும் இபிஎஃப்ஓ திட்டத்தில் புதிதாக 10.08 லட்சம் போ் இணைந்துள்ளனா். இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இஎஸ்ஐசி திட்டத்தில் 12.67 போ் புதிதாக இணைந்துள்ளனா். இந்த தரவுகளின்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் சுமாா் 12.67 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.