புது தில்லி: தில்லி அரசின் மகிழ்ச்சி வகுப்புகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவியும், அமெரிக்க முதல் பெண்மணியுமான மெலானியா டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார். தில்லி அரசின் மகிழ்ச்சி வகுப்பைப் பார்வையிட, தெற்கு தில்லி மோதி பார்க்கில் உள்ள சர்வோதய இரு பாலர் அரசுப் பள்ளிக்கு மெலானியா டிரம்ப் செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். இந்திய, அமெரிக்க கொடிகளைக் கையில் ஏந்தியாவாறு நின்றிருந்த மாணவர்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர். மாணவி ஒருவர் மெலானியா டிரம்புக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் 20 நிமிடங்கள் மெலானியா கலந்துரையாடினார். அப்பள்ளியில் உள்ள வாசிப்பு அறை, செயல்பாட்டு அறை உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். மேலும், அங்கு நடைபெற்ற யோகா வகுப்பையும் பார்வையிட்ட அவர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு, அந்தப் பள்ளியில் நடைபெற்ற மகிழ்ச்சி வகுப்பைப் பார்வையிட்டார்.
பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும், மாணவர்களின் பாரம்பரிய நடனங்களையும் அவர் கண்டு ரசித்தார். பின்னர் தாங்கள் வரைந்த மதுபானி ஓவியங்களையும் கையால் செய்யப்பட்ட அன்பளிப்புப் பொருளையும் அவருக்கு மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், "இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்களாக உள்ளனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களுடைய தினத்தை ஆழ்ந்த கவனிப்புடனும், சூழல் தொடர்பான அறிவுடனும் தொடங்குகிறார்கள். இங்கு நடைபெறும் மகிழ்ச்சி வகுப்புகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன. இதன் மூலம், மாணவர்களுக்குச் சிறந்த, ஆரோக்கியமான எதிர்காலம் கிடைப்பதை கல்வியாளர்கள்உறுதி செய்துள்ளனர்' என்றார்.
இந்த நிகழ்வில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பங்கேற்கவில்லை. முன்னதாக மெலனியா டிரம்பை வரவேற்கும் வகையில் கேஜரிவால் தனது சுட்டுரையில், "தில்லி அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மகிழ்ச்சி வகுப்புகள் கூறும் செய்தியை மெலானியா டிரம்ப் எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார்.
தில்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகள் ஆம் ஆத்மி அரசால் கடந்த 2018, ஜூலையில் தொடங்கப்பட்டன. கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா தனிக் கவனம் எடுத்து இந்த வகுப்பைத் தொடங்கினார். தினந்தோறும் சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த வகுப்பில் மாணவர்களுக்கு தியானம், மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகியவை சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் கதை சொல்லுதல், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்.
இந்த மகிழ்ச்சி வகுப்புகள் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளதாககக் கூறப்படுகிறது.