
வடகிழக்கு தில்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
புது தில்லி: தில்லியில் கலவரம் தீவிரமாக இருந்த வடகிழக்குப் பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், காவல்துறையினர் தங்களது பணியை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.
வடகிழக்கு தில்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடிய பிறகு அஜித் தோவல் இவ்வாறு தெரிவித்தார்.
சில இடங்களில் மக்கள் அவரை வரவேற்று இயல்பாக உரையாடினர். எனினும் ஒரு இடத்தில் வன்முறை தொடர்பாக இருவர் அஜித் தோவலிடம் ஆவேசமாகப் பேசினர்.
தனது ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அஜித் தோவல் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கலவரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டேன். வடகிழக்கு தில்லியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று (புதன்கிழமை) வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை. கலவர அச்சத்திலிருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் விழிப்புடன் இருந்து தங்களது பணியை சிறப்பாகச் செய்து வருகின்றனர். அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்கள் அமைதியை விரும்புகின்றனர்.
மக்களிடையே ஒற்றுமை உணர்வு இருக்கிறதே தவிர, பகைமை எண்ணம் இல்லை. ஒரு சில குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபடுகின்றனர். கலவரப் பகுதிகளில் காவலர்கள் தங்களது பணியைச் செய்து வருகின்றனர் என்று அஜித் தோவல் கூறினார்.
அமித் ஷாவுடன் ஆலோசனை: வடகிழக்கு தில்லியில் கலவரச் சூழலை ஆய்வு செய்த அஜித் தோவல், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து அதுதொடர்பாக விளக்கமளித்தார்.