
பேஸ்புக்
தில்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் முரளீதர் தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா, கபில் மிஸ்ரா ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலா்களான ஹர்ஷ் மந்திர், ஃபரா நக்வி ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.முரளீதர், தல்வந்த் சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தைப் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது. தில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, கல்வீச்சு, வாகனங்களுக்குத் தீவைப்பு என 11 வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது. ஆனால், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனா்.
அப்போது, நீதிமன்ற அறைக்கு வந்திருந்த காவல் துறை சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன், உடனடியாக இதுதொடர்பாக தில்லி காவல் ஆணையரிடம் விவாதிப்பதாக உறுதியளித்தார்.
மேலும், அந்த 3 தலைவர்களின் உரைகள் அடங்கிய விடியோவை ஆய்வு செய்துவிட்டு, வழக்குப்பதிவு செய்வது குறித்து வியாழக்கிழமை நீதிமன்றத்தில் பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை முடிந்த சில மணி நேரத்திலேயே வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளீதர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக, நீதிபதி முரளீதர் உட்பட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்வது குறித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த 12-ஆம் தேதி பரிந்துரைத்தது.
தில்லி வன்முறை தொடர்பான வழக்கில் நீதிபதி முரளீதர் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இடையிலான வாதங்கள் காரசாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.