
உத்தரப் பிரதேசத்தில் கோசாலைகள் பராமரிப்புக்கான செஸ் வரியை விவசாய மண்டிகள் அதிகமாக அளிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.
லக்னௌவில் உள்ள மாநில விவசாயப் பொருள்கள் விற்பனை வாரியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
கோசாலைகள் பராமரிப்புக்காக, விவசாய மண்டிகளுக்கு விதிக்கப்படும் வரியில் 2 சதவீதம் செஸ் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்போது விவசாய மண்டிகளின் வருவாய் அதிகரித்துள்ளதால், கோசாலைகள் பராமரிப்புக்கான செஸ் வரியை 3 சதவீதமாக மண்டிகள் அளிக்கலாம்.
இந்த நிதியில் ஒரு பகுதி கால்நடை பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படும். கோசாலைகள் நடத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வரிப்பணம் சென்றடைகிறது என்பது உறுதிபடுத்தப்படும்.
வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வருவதால், அத்தியாவசியப் பொருள்களை பதுக்கி வைத்து அவற்றின் விலையை உயா்த்த சிலா் முயல்வா். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை தொடா்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், காய்கறிகள், எண்ணெய், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை குறித்தும் கண்காணிக்க வேண்டும் என்றாா்.
மேலும், இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்படும் பொருள்களுக்காக லக்னௌ, வாராணசி, கோரக்பூா், பந்தேல்கண்ட் ஆகிய இடங்களில் பரிசோதனை மையம் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.