
சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வழக்கு விசாரணை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார். மே 30, 2019-ல் ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.
அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினர் வி.விஜயசாய் ரெட்டியும் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டி ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது அவரது கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
ஆந்திர முதல்வராக மறைந்த ராஜசேகர ரெட்டி செயல்பட்ட 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும் மே 2012 முதல் செப்டம்பர் 2013 வரையிலான காலகட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெகன் மோகன் ரெட்டி தற்போது பிணையில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.