தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 21. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் இன்றுமுதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ், கடந்த 2015 தேர்தலில் தோல்வியுற்றது. இதையடுத்து, 2020 தேர்தலில் தில்லியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. தில்லியின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருவதாக ஏற்கனவே பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டி வருகிறது
கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எடுத்துக்காட்டி காங்கிரஸ் ஏற்கனவே தனது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.