70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அங்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தில்லி பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா பிற்பகல் 3.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தில்லி பேரவைத் தேர்தல் குறித்து 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1.46 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 90,000 அலுவலர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மொத்தம் 13,000 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
70 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தில்லிக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 21 ஆகும்.
இதையடுத்து, பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது" என்றார்.
2020 பேரவைத் தேர்தல்:
வாக்குப்பதிவு | பிப்ரவரி 8 |
வாக்கு எண்ணிக்கை | பிப்ரவரி 11 |
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் | ஜனவரி 14 |
வேட்புமனுத் தாக்கல் நிறைவு | ஜனவரி 21 |
வேட்புமனுத் தாக்கல் ஆய்வு | ஜனவரி 22 |
வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் | ஜனவரி 24 |
தில்லியில் கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. மீதமுள்ள 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 32.3 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 54.3 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 9.7 சதவீத வாக்குகளையும், பிற கட்சிகள் 3.7 சதவீத வாக்குகளையும் பெற்றன.