பிகார் தலைநகர் பாட்னாவில் ஜூலை 10 முதல் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தலைநகர் பாட்னாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, ஜூலை 10 முதல் ஜூலை 16 வரை பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த காலகட்டத்தில் அனைத்து மதம் சார்ந்த இடங்களும் மூடப்படும். அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும். அதுவும், காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கும். இந்த சமயத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் இதுவரை 12,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாக்கிழமை மட்டும் 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். பாட்னாவில் பாதிப்பு 1,114 ஆக உள்ளது.