சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் குடியுரிமை, கூட்டாட்சி முறை, பிரிவினை உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமலே உள்ளன. இதன் காரணமாக சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமையைக் குறைப்பதற்காக 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 30 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் குடியுரிமை, தேசியவாதம், கூட்டாட்சி முறை, பிரிவினை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளை உள்ளடக்கியுள்ள பாடங்கள் நீக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
"கரோனா நெருக்கடி காரணமாக பாடங்களைக் குறைப்பதாக குடியுரிமை, கூட்டாட்சி முறை, மதச்சார்பின்மை மற்றும் பிரிவினை உள்ளிட்டவை பற்றிய பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற மிக முக்கியப் பாடங்கள் நீக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம்."