வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் என்ற மேற்கு வங்க அரசின் முடிவுக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஒரு சில பகுதிகளில் கரோனா பரவல் இருப்பதால் மாநிலம் முழுவதும் வாரத்துக்கு இரு நாள்கள் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் என்ற மாநில அரசின் முடிவுக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கரோனா தடுப்புப் பணியில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் அழுத்தத்தைக் குறைக்க இது உதவும் என்றும் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் டிப்டேந்திர சர்க்கார் கூறுகையில், 'மாநிலத்தில் ஒரு சில இடங்களில் சமூகப் பரவல் இருப்பதாகத் தெரிகிறது. இதனைக் கட்டுப்படுத்த வாரத்தில் இரு நாள்கள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பொது முடக்கம் மூலமாக சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தை நாங்கள் குறைக்க முடியும்' என்றார்.
மற்றொரு மருத்துவர் டாக்டர் சியாமாசிஸ் பாண்டியோபாத்யாய் கூறுகையில், 'அரசின் விதிமுறைகளை பெரும்பாலான மக்கள் மீறுவதால் பரவல் அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறி வெளியே நடமாடுகின்றனர். இதுவே சமூகப் பரவலுக்கு காரணமாக அமைகிறது. வைரஸின் தீவிரத்தை இன்னும் பலர் உணரவில்லை என்றே நான் நினைக்கிறன். எனவே, அரசின் விதிமுறைகளை நாம் முறையாக பின்பற்ற வேண்டும்' என்று கூறினார்.