புது தில்லி: பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து புறப்பட்ட அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.
ஹரியாணாவின் அம்பாலா விமானப் படைத் தளத்தில் வந்திறங்கிய ரஃபேல் போர் விமானங்கள் மீது தண்ணீரை பிய்ச்சி அடித்து வரவேற்க விமானப் படை ஏற்பாடுகளை செய்திருந்தது. அந்தப் போா் விமானங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இவை விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.
இதையும் படிக்கலாம்.. ரஃபேல் போா் விமானத்தின் சிறப்பம்சங்கள்
ரஃபேல் போர் விமானங்களை வரவேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சுட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
அதில், அந்தப் பறவைகள் மிகப் பாதுகாப்பாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன.
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணைத் தொட்டிருப்பதன் மூலம், ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பன்முகத் திறன் கொண்ட போர் விமானங்கள், இந்திய விமானப் படைத் திறனில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.