மிசோரத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த 18 வயது பெண் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெற்கு மிசோரத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள சங்காவ் -1 கிராமத்தில் வசித்து வருகிறார் லால்வென்மாவி. 18 வயதான இவர் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட விரும்பி, மாநில அரசின் அனுமதி பெற்று இந்திய- மியான்மர் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தார். எல்லை தாண்டி மக்களை செல்வதை கண்காணிக்கும் பணியில் இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக திங்களன்று சங்காவில் உள்ள ஒரு பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து,. செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.
அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் சிக்கலான நோயால் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அவருக்கு இறுதிச் சடங்கின்போது அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு முதல்வர் சோரம்தங்கா இரங்கல் தெரிவித்ததோடு, முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.