திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கோயில் இன்று மற்றும் நாளை இரு தினங்கள் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோயில்கள் அனைத்தும் ஜூன் 8ம் தேதி முதல் திறக்கப்பட்டது. திருமலையைத் தவிர்த்து மற்ற கோயில்களில் தரிசனம் பெற தேவஸ்தானம் ஒரு சேவை எண் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த எண்ணிற்குக் கோயில் பெயர், தேதி, பக்தர்களின் எண்ணிக்கை குறித்து குறுந்தகவல் அனுப்பினால் தரிசனம் உறுதி செய்யப்பட்ட நேரம் மற்றும் தேதி குறித்த தகவல் அனுப்பப்படும்.
ஆனால் தற்போது கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர் பணிபுரிந்த அலுவலகங்கள் மூடப்பட்டு கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலிலும் அவர் பணிபுரிந்ததால், கோயிலிலும் இன்றும் நாளையும் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு கிருமிநாசினி திரவத்தால் சுத்தம் செய்யப்பட உள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியருக்கு பல்வேறு உடல்நல குறைபாடுகள் இருந்ததால் பரிசோதனைக்குச் சென்ற போது கரோனா தொற்று இருப்பது அறியப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.