ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரிடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு(எஸ்ஓஜி) புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அளித்த தகவலின்படி, சி.ஆர்.பி.எப் மற்றும் ராஷ்டிரிய ரைபின்ஸ் (ஆர்ஆர்) ஆகிய குழுக்கள் ஒன்றிணைந்து இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும், கிராமத்திலிருந்து வெளியேறும் அனைத்து இடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரருக்கு காஷ்மீர்(ஐ.ஜி.பி) விஜய் குமார் அஞ்சலி செலுத்தினார். மேலும், வதந்திகளைத் தடுக்கும்வகையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பி.எஸ்.என்.எல்) உள்பட அனைத்து செல்லுலார் நிறுவனங்களின் மொபைல் இணையச் சேவையையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.