சுஷாந்தின் இன்ஸ்டாக்ராம் கணக்கு வேறு யாராலோ இயக்கப்படுகிறது: பரபரப்பு குற்றச்சாட்டு!
கொல்கத்தா: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் இன்ஸ்டாக்ராம் கணக்கு வேறு யாராலோ இயக்கப்படுகிறது என்று பாஜக எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டினை கிளப்பியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் முன்னாள் நடிகையும் பாஜக எம்,பியுமான ரூபா கங்குலி. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் இன்ஸ்டாக்ராம் கணக்கு வேறு யாராலோ இயக்கப்படுகிறது என்று இவர் பரபரப்பு குற்றச்சாட்டினை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டு அவர் அதில் கூறியுள்ளதாவது:
சுஷாந்தின் இன்ஸ்டாக்ராம் கணக்கு வேறு யாராலோ இயக்கப்படுகிறது. அந்த கணக்கில் என்ன நீக்கப்படுகிறது, என்ன சேர்க்கப்படுகிறது என்று யாருக்குமே தெரியவில்லை. எப்படி யாரோ ஒருவரால் அவரது கணக்கினை தற்போது இயக்க முடியும்? அது போலீஸ்தானா அல்லது வேறு யாராவதா?
இதுகுறித்து முதலில் கேள்விப்பட்டபோது நான் நம்பவே இல்லை. பின்னர் சில ஸ்க்ரீன்ஷாட்டுகளை நான் பார்த்தேன். நானே கூட சில ஸ்க்ரீன்ஷாட்டுகளை எடுத்திருக்கிறேன். இது எப்படி சாத்தியம்? சிபிஐ விசாரணை எப்போது துவங்கும்? எல்லா சாட்சியங்களும் அழிக்கப்பட்ட பின்னரா?
இது உண்மை என்றால் தொடர்புடைய சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றது என்ற விஷயத்தையே எல்லாமே உணர்த்துகிறது. இந்த வழக்கில் வெளிபடைத்தன்மைக்காக இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது? சிபிஐ எப்போது தலையிடும்?
இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ள ரூபா தனது ட்வீட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.