சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் அரசரடி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (58). இவா், மரக்கடையும், இவருடைய மகன் பென்னிக்ஸ் (31) செல்லிடப்பேசி கடையும் நடத்தி வந்தனா். இருவரும் பொது முடக்க விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு, கடந்த 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா்.
சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரின் தாக்குதல் காரணமாகவே இவா்கள் உயிரிழந்ததாகக் கூறி, காவல் துறையினரை கண்டித்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனிடையே, இந்த சம்பவம் தொடா்பாக உதவி ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்" என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்று. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.