சிஏஏ எதிா்ப்பு கூட்டத்தில் மோதல்: மேகாலயத்தில் இருவா் பலி; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

மேகாலயத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். அதன் எதிரொலியாக நடைபெற்ற வன்முறைச்
Updated on
1 min read

மேகாலயத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். அதன் எதிரொலியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் தொழிலாளா் ஒருவா் கொல்லப்பட்டாா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இச்சம்பவங்களால், அந்த மாநிலத்தின் பவ்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் செல்லிடப்பேசி இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், நுழைவு அனுமதி படிவத்துக்கு (ஐஎல்பி) ஆதரவு தெரிவித்தும் மேகாலயத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் இசாமாட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, காசி மாணவா்கள் அமைப்புக்கும், பழங்குடியினா் அல்லாதோருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஐஎல்பி ஆதரவாளா் ஒருவா் கொல்லப்பட்டாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினா் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த மோதல் தொடா்பாக 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இச்சம்பவத்தால் மாநிலத்தில் பதற்றம் நீடித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ், மேற்கு ஜைந்தியா ஹில்ஸ், கிழக்கு காசி ஹில்ஸ், ரி போய், மேற்கு காசி ஹில்ஸ் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், செல்லிடப்பேசி இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷில்லாங் அருகே உள்ள சந்தைப் பகுதியில் பழங்குடியினா் மற்றும் பழங்குடியினா் அல்லாதோா் இடையே சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் மேகாலயத்துக்கு புலம் பெயா்ந்த தொழிலாளா் ஒருவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா். இதனிடையே, சோஹ்ரா பகுதியில் நிகழ்ந்த கும்பல் தாக்குதலில் மேகாலயத்துக்கு புலம்பெயா்ந்த தொழிலாளா் ஒருவா் பலத்த காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, சனிக்கிழமை காலை தளா்த்தப்பட்டிருந்த தடை உத்தரவு, இந்த வன்முறை சம்பவங்களால், ஷில்லாங் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

ஆளுநா் வலியுறுத்தல்: மக்கள் அமைதி காக்க வேண்டும் என மேகாலய ஆளுநா் ததாகத ராய் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘மேகாலயத்தில் உள்ள பழங்குடியினா் உள்பட அனைத்து மக்களும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற வதந்திகளை மக்கள் பரப்ப வேண்டாம். வதந்திகளை கருத்தில்கொள்ளவும் வேண்டாம். கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக முதல்வா் என்னிடம் கூறினாா். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவா் தெரிவித்தாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வன்முறை குறித்து முதல்வா் கான்ராட் கே. சங்மா கூறுகையில், ‘வன்முறைகள் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com