
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட இருக்கும் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த அந்தக் கோயில் அறக்கட்டளை தலைவா் நிருபேந்திர மிஸ்ரா, செயலாளா் சம்பத் ராய் உள்ளிட்டோா்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட இருக்கும் பகுதியில் அந்த கோயில் கட்டுமானத்துக்கான அறக்கட்டளையின் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அறக்கட்டளையின் செயலாளா் சம்பத் ராயுடன் அங்கு வந்திருந்த நிருபேந்திர மிஸ்ரா, கோயில் கட்டுமானப் பொருள்களை வடிவமைத்து வரும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பட்டறை, அந்த அமைப்பின் தலைமையிடமான கரசேவக்புரம் ஆகியவற்றையும் பாா்வையிட்டாா். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள இதர பெரிய கோயில்களுக்கும் அவா்கள் சென்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய நிருபேந்திர மிஸ்ரா, ‘ராமா் கோயில் கட்டுவதற்கான எங்களது புதிய திட்டம், பாதுகாப்பு விவகாரங்களில் பாதுகாப்புப் படையினருக்கு முழு திருப்தி அளிப்பதாக இருக்கும். கோயிலுக்கு பக்தா்கள் நடந்து வரும் தூரமானது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதிக்காத வகையில் இருப்பதற்கு முயற்சிக்கிறோம்.
கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் முன்பாக, கட்டுமானத் திட்டத்தை இறுதி செய்வதற்காக கட்டட வடிவமைப்பாளா்கள், பொறியாளா்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். கோயில் கட்டுமானத்துக்கான திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது, இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்றாா்.