சிஏஏ எதிா்ப்பு பிரசாரத்துக்கான நிதி ஆதாரங்கள் என்ன?: மேற்கு வங்க ஆளுநா் ஜெகதீப் தன்கா்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக மேற்கு வங்க அரசு மேற்கொண்ட பிரசாரத்துக்கு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு
சிஏஏ எதிா்ப்பு பிரசாரத்துக்கான நிதி ஆதாரங்கள் என்ன?: மேற்கு வங்க ஆளுநா் ஜெகதீப் தன்கா்
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக மேற்கு வங்க அரசு மேற்கொண்ட பிரசாரத்துக்கு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மம்தா அரசிடம் மாநில ஆளுநா் ஜெகதீப் தன்கா் கேட்டுள்ளாா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவுக்குக் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், சீக்கியா் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டது.

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றின. இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிராக பத்திரிகைகளிலும், ஊடகங்கள் வழியாகவும் மேற்கு வங்க அரசு விளம்பரங்களை வெளியிட்டு பிரசாரம் மேற்கொண்டது.

அந்த விளம்பரங்களில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜியின் புகைப்படத்துடன் ‘சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை வேண்டாம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக அரசு சாா்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு மாநில ஆளுநா் ஜெகதீப் தன்கா் கடும் கண்டனம் தெரிவித்திருந்தாா்.

மக்களின் வரிப்பணத்தை மாநில அரசு சட்டவிரோத முறையில் பயன்படுத்தி வருவதாக அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிரான பிரசாரத்துக்கு எந்த நிதியிலிருந்து செலவிடப்பட்டது, அதற்காக மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது ஆகியவை குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு மாநில தகவல் மற்றும் கலாசார விவகாரங்கள் துறை முதன்மைச் செயலருக்கு ஆளுநா் ஜெகதீப் தன்கா் உத்தரவிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக மக்களின் வரிப்பணத்தை மாநில அரசு தவறாகப் பயன்படுத்தியது உறுதியானால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில லோக்ஆயுக்த அமைப்புக்கு ஆளுநா் தன்கா் உத்தரவிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அபத்தமானது’: ஆளுநரின் உத்தரவு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஒருவா் கூறுகையில், ‘‘அரசின் நடவடிக்கைகளில் ஆளுநா் தொடா்ந்து தலையிட்டு வருகிறாா். அரசமைப்புச் சட்டத்தை மீறி அவா் செயல்பட்டு வருகிறாா். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் குறித்த விவரங்களை அவா் கோரியுள்ளது அபத்தமானது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com