

கரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் தில்லி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று மரணமடைந்தார். ஆனால், அவருக்கு ரத்த பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கரோனா வைரஸ் குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மத்திய அரசு மற்றும் தில்லி அரசுக்கு, தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் டி.என். படேல், சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அதில், கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு முறையான மற்றும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.