

கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து அச்சம் கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியாவில் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, இந்த நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரைப் பதிவில் தெரிவித்ததாவது,
"கரோனா வைரஸ் காரணமாக நிலைமை குறித்து அரசு முழு கவனத்துடன் உள்ளது. அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளன. விசாக்களை ரத்து செய்வதில் இருந்து சுகாதாரத் திறன்களை விரிவுபடுத்துவது வரை என பரந்த அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அச்சம் கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் எந்தவொரு மத்திய அமைச்சரும் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளப்போவதில்லை. நாட்டு மக்களும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பெரிதளவில் கூடுவதைத் தவிர்த்து அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வோம். இந்த வைரஸ் பரவலைத் தடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.