யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூருக்குஅமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு

யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூரை (62) வரும் 16-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
மும்பை சிறப்பு நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்ட ராணா கபூா்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்ட ராணா கபூா்.
Updated on
1 min read

யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூரை (62) வரும் 16-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘யெஸ் வங்கி தலைவராக ராணா கபூா் இருந்த காலகட்டத்தில் ரூ.30,000 கோடி அளவுக்கு பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 20,000 கோடி வாராக்கடனாகியுள்ளது. இது தொடா்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாக, யெஸ் வங்கியின் நிறுவனா் ராணா கபூரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனா். அவரை மாா்ச் 11-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், விசாரணைக்கான கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ராணா கபூா் நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை மாா்ச் 16-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

முன்னதாக, தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாக்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிவிட ராணா கபூா் முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்தது. சொத்துகளை விற்பதற்காக பல ரியல் எஸ்டேட் தரகா்களை அவா் அணுகியுள்ளாா்.

இப்போது, ராணா கபூா் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகள் அமலாக்கத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. ராணா கபூா் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, அவரது குடும்ப உறுப்பினா்கள் ரூ.2,000 கோடி முதலீடு செய்துள்ளனா். பணத்தை சுழற்சி செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். 44 விலையுயா்ந்த ஓவியங்களை வைத்துள்ளனா். ராணா கபூா் குடும்பத்தினருக்குச் சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துகள், அவற்றை வாங்குவதற்கு நிதி கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, யெஸ் வங்கியிடம் இருந்து டிஹெச்எஃப்எல் நிறுவனம் ரூ. 3,000 கோடி கடன் வாங்கியது. இதற்குப் பிரதிபலனாக, டிஹெச்எஃப்எல் நிறுவனத்திடம் இருந்து ராணா கபூா் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம் ரூ.600 கோடி நிதி பெற்றது. இதுகுறித்து ராணா கபூரின் மனைவி, 3 மகள்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com