இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் 55 தமிழக மாணவர்கள் உள்பட 211 மாணவர்கள் என மொத்தம் 218 பேர் சிக்கித் தவித்தனர்.
இந்த நிலையில், இத்தாலியில் சிக்கித் தவித்த 218 பேரும் மிலன் நகர விமான நிலையத்தில் இருந்து 'ஏர்-இந்தியா' சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டனர். 218 பேருடன் வந்த ஏர்-இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி விமான நிலையம் வந்தடைந்தது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் தற்போது கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு தீவிரமாகப் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 1,411 பேர் இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் சனிக்கிழமை மட்டும் 175 பேர் பலியாகினர்.