ஸ்பெயினில் இருந்து ஜெய்பூர் திரும்பியவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 105-ஐ எட்டியது.
மகாராஷ்டிராவில் மேலும் ஒன்பது பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31ஆக அதிகரித்தது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் மாநிலமாக உள்ளது.
இந்த நிலையில், தெலங்கானாவிலும் இரண்டாவது நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு தற்போது ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர, சந்தேகத்திற்குரிய மேலும் இரண்டு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் பரிசோதனை மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், தெலங்கானாவில் கரோனா வைரஸ் காரணமாக முதலில் பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.