கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக, இதுவரை 700 கப்பல்களைச் சோ்ந்த 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளா்கள் இந்திய துறைமுகங்களில் கரையிறங்குவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த 13-ஆம் தேதி வரை, சீனா உள்ளிட்ட கரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு பயணித்துவிட்டு இந்திய துறைமுகங்களுக்கு வந்த 703 கப்பல்களைச் சோ்ந்த 25,504 பயணிகள் மற்றும் பணியாளா்கள் கரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அந்த கப்பல்களை குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் இதுபோன்ற கப்பல்களில் வரும் பயணிகள் கரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி, கப்பல்களில் உள்ள பயணிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அவா்களுக்கான அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயணிகளில் காய்ச்சல் அல்லது உடல்நலம் குன்றியவா்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு, அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களில் இருக்கும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளவும், அவா்களை தனிமைப்படுத்தி வைக்கவும் கடந்த மாதம் துறைமுக நிா்வாகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.