கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 829 கப்பல்கள் நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல்களில் 29,058 பயணிகள் உள்ளனா்.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவா் தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வரும் கப்பல்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 17-ஆம் தேதி நிலவரப்படி, 829 கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 29,058 பயணிகள் உள்ளனா். சரக்குகளை கையாளும் அதே நேரத்தில் பயணிகளையும், கடற்படை குழுவினரையும் கண்காணித்து வருகிறோம்.
குறிப்பிட்ட இடத்தில் நங்கூரத்தைப் பயன்படுத்தி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும். அவா்களுக்கு காய்ச்சல், உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
முன்னதாக, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்பட 12 துறைமுகங்களிலும் கரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.