கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திரத்தில் ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் உள்பட அனைவரும் முகக்கவசத்துடன் காணப்படும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொடர்ந்து, கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா அச்சத்தால் ஆங்காங்கே வித்தியாசமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உங்குட்டூர் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று வித்தியாசமான முறையில் அதே நேரத்தில் கரோனா விழிப்புணர்வுடன் நடைபெற்றுள்ளது.
திருமண விழாவில் மணமக்கள் உள்பட அனைவரும் முகக்கவசத்துடன் காணப்படுகின்றனர். முகக்கவசத்துடன் திருமண சடங்குகள் நடப்பது போன்று விடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்கள் வீட்டார் கரோனா விழிப்புணர்வுடன் திருமணம் நடத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.